பாளையங்கோட்டை , பிப் 23
தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு நபரை காதலித்த கல்லூரி மாணவியை அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் கல்லூரி வளாகத்திலேயே மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலகிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்துள்ளார். கல்லூரி படிக்கும் பொழுது அதே கல்லூரியில் படித்த நெல்லை டவுனை சேர்ந்த பெண்ணோடு காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றரை ஆண்டு காலம் காதலித்து வந்துள்ளனர் . இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கல்லூரி மூடப்பட்ட நிலையில் இருவரும் நேரில் சந்திப்பது தடைபட்டு இருவருக்கும் இடையே உள்ள தொடர்பில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
தனது காதலியை பார்க்க முடியாத விரக்தியில் நெல்லை டவுனில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கும் பாலகிருஷ்ணன் சென்றுள்ளார் . அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் எச்சரித்து அனுப்பிவிட்டனர் . இதனிடையே பாலகிருஷ்ணனை காதலித்த அந்த இளம் பெண் வேறு ஒரு இளைஞரை தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நிலையில் தனது பழைய காதலியை தேடி டவுணில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் . அங்கு சென்று பார்த்த போது அவர் கல்லூரிக்கு சென்ற தகவல் கிடைக்கவே , கல்லூரிக்கு சென்று காவலாளியை ஏமாற்றி உள்ளே சென்ற அவர் அங்கு தனது காதலியை சந்தித்து பேச முற்பட்ட நிலையிலும் அவர் பேச மறுத்து இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தனது கையில் வைத்திருந்த சிறிய அளவிலான பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்து விட்டார் இதில் ஏற்பட்ட காயத்தால் மாணவி அலறி துடித்த நிலையில் அவர் மீட்கப்பட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் அங்கு இருந்த சிலர் பாலகிருஷ்ணனை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .